ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு- தென் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல்!
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி 2 ஆவது கேட் பகுதியில் தெற்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணைச் செயலளார் அந்தோணி உட்பட அக்கட்சியினர் 19 பேர் மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ரயிலை மறிக்க முயன்றனர். அவர்களை மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் விருதுநகர், தஞ்சை, திண்டுக்கல், சிவகங்கையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications