ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஈடாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடியதால், தூத்துக்குடி மாநகரமே குலுங்கியது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் என்ற தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இது வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமானது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பல காலமாகமே சிறு அளவில் மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் உள்ளனர்.

இந்த நிலையில், இடி மேல் இடி இறங்கியதை போல ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை ஒன்றிணைந்து தீவிரப்படுத்தியுள்ளனர்.

பல கட்டங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலில், ஆலை விரிவாக்கத்தை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டம் நடத்தினர். பிப்ரவரி13ம் தேதி போராட்டத்தில் ஈடுபபட்ட சுமார் 230 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 40 தினங்களாக குமரெட்டியார்புர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துள்ளனர் தூத்துக்குடி மக்கள். ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடியில் இன்று முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆனால் காலை 6 மணிக்கு மூடப்பட்ட கடைகள் இரவு 6 மணிக்கு பிறகும் திறக்கப்ப்டவில்லை. இதில் மெடிக்கல்களுக்கு மட்டுமே விதிவிலக்கு. ஆயிரக்கணக்காக திரண்ட தூத்துக்குடி மக்கள் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரவில் கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு எந்த அரசியல் கட்சி தலைவரையும் தலைமையேற்க மக்கள் அழைக்கவில்லை. அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் மக்களே முன்னின்று போராட்டத்தை நடத்துகிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுக்க நடந்த போராட்டங்களை போன்றே உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம்.. தூத்துக்குடி ஸ்தம்பிப்பு https://t.co/1VCQJ70UGu #SterliteProtest #Tuticorin pic.twitter.com/uGMd0Ylmjo
— Oneindia Tamil (@thatsTamil) March 24, 2018
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் தூத்துக்குடி மாநகரமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, நெல்லை, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை இயக்குநர் அனில் அகர்வாலின் லண்டன் வீட்டுக்கு எதிரே தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படங்கள்- வீடியோ உதவி: யு. காதர் மஸ்தான்












Click it and Unblock the Notifications