மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முற்றுகை... தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோடு, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்யப் போவதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவிரி உரிமையை மீட்கும் நோக்கிலும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்துள்ள தாக்குதலைக் கண்டித்தும், இந்தத் தாக்குதலுக்கு உடந்தையான கர்நாடக மாநில அரசையும் இந்திய அரசையும் கண்டித்தும், வணிகர் சங்கங்களும் உழவர் சங்கங்களும் வருகிற 16-ம் நாள் நடத்தும் தமிழக அளவிலான முழு அடைப்பில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு முனைப்புடன் பங்கேற்கத் தீர்மானிக்கப்படுகிறது.
வரும் 16-ம் நாள் முழு அடைப்பின் போது தமிழகம் எங்கும் இந்திய அரசு அலுவலகங்களை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் அனைத்து இயக்கங்களும் முற்றுகையிட்டுப் போராடுவது என முடிவு செய்யப்படுகிறது.
கர்நாடகமும் தமிழ்நாடும் இருநாடுகளாக இல்லாமல், இந்தியாவின் இரு மாநிலங்களாக உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை மீட்டுத் தருமாறு இந்திய அரசை வலியுறுத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.