முதல்வர் நலம், டாக்டர்கள் கூறினர்.. வேல்முருகன் தகவல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்று காரணம் கூறி தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது. இதுவரை 5 அறிக்கைகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அதிமுகவினர் அப்பல்லோ வாசலைவிட்டு நகரவே இல்லை. இரவு பகலாக காத்திருக்கின்றனர்.
ஊடகங்களில் இருந்து ஷிஃப்ட் கணக்கில் ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கேமரா மட்டும் அப்படியே நகராமல் இருக்கிறது. ஜெயலலிதா எப்போது அப்பல்லோவை விட்டு வெளியே வருவார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆளுநர் அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவைக் காண அதிமுக நிர்வாகிகள் தவிர கடந்த 1ம் தேதி ஆளுநர் சென்றார். முதல்வர் நலம் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை பலருக்கு மேலும் சந்தேகத்தை அதிகரித்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு அப்பல்லோவிற்கு சென்றார்.
திருமாவளவன்
திருமாவளவன் மருத்துவமனைக்கு சென்றதும், அங்கிருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது. அவரை அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்துக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் அவரிடம் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கி கூறினர்.
சந்திக்காத திருமா
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மருத்துவமனையில் எந்த கெடுபிடிகளும் இல்லை என்றும் முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்ற தகவலை அதிமுக நிர்வாகிகள் கூறியதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் அவரும் முதல்வரை சந்திக்கவில்லை என்ற தகவலை அறிய முடிந்தது.
முத்தரசன் சொன்னது என்ன?
அப்பல்லோ மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
முத்தரசன் வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு, பின்னர்
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மருத்துவமனைக்குள் செல்ல எந்த
கெடுபிடியும் இல்லை. அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன். முதல்வர்
ஜெயலலிதா படிப்படியாக குணமடைந்து வருகிறார். அவர் பூரண குணமடைந்து மக்கள்
பணி ஆற்றுவார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
வேல்முருகன் தகவல்
இன்று காலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அவரும் மருத்துவமனைக்குள் சென்று சில நிமிடங்களில் திரும்பிய அவர், முதல்வர் நலமாக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் வேல்முருகன் தெரிவித்தார். ஐந்து தினங்களுக்கு முன்பு ஆளுநர் சொன்னதைத்தான் இன்று வேல்முருகனும் கூறியுள்ளார்.