வேல்முருகன் மீது எப்படி பொய் கேஸ் போடலாம்: செல்போன் டவரில் ஏறி த.வா.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடலூர்: கடலூர் மாவட்ட பாமக நிர்வாகி ஆறுமுகம் உள்பட 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட அக்கட்சியினர் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து வேல்முருகன் கட்சியினர் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(42). அவர் கடந்த சனிக்கிழமை தனது ஆதவாளர்களுடன் காடாம்புலியூருக்கு சென்றுவிட்டு நெய்வேலிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மற்றும் ஆதரவாளர்கள் 6 பேரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் உள்பட 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆறுமுகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்கியதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருக்கும் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
பொய்வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் மங்களுர் ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி தவிர சேலம், தஞ்சை, திண்டுக்கல், உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், ஓமலூர் என பல இடங்களிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications