வேல்முருகன் கட்சி போட்டியிடாத இடங்களில் மநகூ, நாம் தமிழர், பாமக, பச்சை தமிழகம் கட்சிகளுக்கும் ஆதரவு!
நெய்வேலி: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாம் போட்டியிடாத இடங்களில் தமிழர் நலனுக்கு குரல் கொடுக்கும் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி , உதயகுமாரின் பச்சை தமிழகம், பொன்ராஜின் அப்துல்கலாம் கட்சி உள்ளிட்ட தமிழர் மற்றும் இளைஞர் நலன்சார்ந்து குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்று அதன் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அறிவித்துள்ளார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆதரவைக் கோரினால் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஆதரவளிப்போம் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அக் கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகியது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பண்ருட்டி வேல்முருகனுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி வேல்முருகன், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியா? இல்லையா? என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடாத இடங்களில் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, பாமக, பச்சை தமிழகம் என தமிழர் நலன் சார்ந்து தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
இதர தமிழ்த் தேசிய இயக்கங்கள், கட்சிகள் எங்களது ஆதரவைக் கோரினாலும் ஆதரவளிப்போம். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜகதான் தமிழர் விரோத கட்சிகள். ஆகையால் இந்த இரு கட்சிகள் இல்லாமல் தமிழர் நலன் சார்ந்து இயங்கும் கட்சிகளை அது பாமகவாக இருந்தாலும் ஆதரிப்போம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.