கர்நாடகவுக்கு எதிரான நாளைய முழு அடைப்புக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு- வேல்முருகன்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் தழுவிய அளவில் விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் நாளை நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்று அங்குள்ளவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் தமிழர்களை கொடூரமாக தாக்கியும் தமிழர் சொத்துகளை தீக்கிரையாக்கியும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்துள்ளனர். ஒரே நாளில் பல நூறு வாகனங்களை எரித்துள்ளனர். மேலும், தர்மபுரி பாலக்கோட்டைச் சேர்ந்த நவாஸ் பாஷாவின் குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்லவும் முயற்சி செய்துள்ளனர்.
இந்தக் கொடுமைகளை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications