சில்வர் பீச்சில் மூழ்கி +2 மாணவர்கள் 2 பேர் பலி... நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்றபோது சோகம்
கடலூர் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற போது 2 மணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கடலூர்: பள்ளி மாணவர்கள் 7 பேர் தங்களின் நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு சில்வர் பீச்சில் கொண்டாடியுள்ளனர். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் துறைமுகம்- சோத்திக்குப்பத்தைச் சேர்ந்த கவி என்பவரின் மகன் கவானும் கிஞ்சம்பேட்டை இலியாஸ் மகன் முகமது ஆசீப்பும் முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று தங்களின் நண்பர் பார்த்த சாரதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சக நண்பர்களுடன் சில்வர் பீச்சு அருகே உள்ள சவுக்குத் தோப்பில் கொண்டாடியுள்ளனர். பின்னர் நண்பர்கள் 7 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் மாணவர்கள் சிக்கினர். இதில் பார்த்தசாரதி உள்ளிட்ட 5 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர்.
கவானும் ஆசிப்பும் மாயமாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கடலில் மூழ்கிய மாணவர்களை தேடினர்.
அப்போது கவான் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
முகமது ஆசிப்பின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.