கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதல்: கோவையை சேர்ந்த இருவர் கருகி சாவு
கிருஷ்ணகிரி: லாரி மீது கார் மோதிய விபத்தில் இரு வாகனங்களும் தீக்கிரையாகி 2 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை நடந்துள்ளது.
கோவை காந்திபுரத்தில் செல்போன் கடை நடத்திவரும் அந்தோணி தாஸ் (30), மற்றும் அவரது நண்பர் ரெஜி ராஷ் (30). இருவரும் நேற்றிரவு கோவையில் இருந்து தொழில்நிமித்தமாக எஸ்யூவி வகை கார் ஒன்றில் பெங்களூரு வந்துள்ளனர். இன்று அதிகாலை அந்த கார் கிருஷ்ணகிரி அருகே அணைப் பிரிவு சாலையில் சென்றபோது சாலையின் இடதுபுறமாக இருந்து வந்த தேங்காய் லோடு லாரி திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளது. இதனால் அந்தோணி தாஸ் பயணித்த கார், லாரியின் டீசல் டேங் பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதையடுத்து இரு வாகனங்களிலும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அந்தோணி தாஸ் மற்றும் ரெஜி ராஷ் இருவரும் உடல் கருகி இறந்தனர், லாரியின் டிரைவர் மற்றும், கிளீனர் இருவரும் காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications