அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் குழந்தைகள் சடலம் - தலைமறைவான தந்தை
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன், சிறுமி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் தந்தை தலைமறைவாகியுள்ளதால் இருவரும் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருபவர் ரவி(வயது 40). இவருடைய மனைவி மகேஸ்வரி(35). இருவரும் வழக்கறிஞர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியதர்சினி(13) என்ற மகளும், பிரபு(12) என்ற மகனும் இருந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பிரியதர்சினி, பிரபு இருவரும் தந்தை ரவியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். பிரியதர்சினி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பும், பிரபு ஆறாம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை ரவி, வீட்டை பூட்டிக்கொண்டு காரில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. வீடு பூட்டியே கிடந்தது.
துர்நாற்றம் வீசிய வீடு
இதனிடையே புதன்கிழமையன்று வழக்கறிஞர் ரவியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சி அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் டி.வி., பேன், ஏ.சி. உள்ளிட்டவைகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. கட்டிலில் ரவியின் மகள் பிரியதர்சினி, மகன் பிரபு இருவரும் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்தது எப்படி?
பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் ரவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது அனைத்து வைக்கப்பட்டு இருந்தது.
உதிர்ந்த சடலங்கள்
சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சிறுவன், சிறுமியின் உடல்களை தூக்கும் போது தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டு, துண்டாக உதிர்ந்து விழுந்தது.
போலீசார் விசாரணை
ரவி வீட்டை பூட்டி விட்டுச்சென்று 6 நாட்களுக்கும் மேல் ஆகிறது. எனவே தனது பிள்ளைகளை ரவியே கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டாரா? அல்லது ரவி வீட்டில் இருந்து சென்ற பிறகு மர்ம நபர்கள் யாராவது ரவியின் பிள்ளைகளை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காட்டிக்கொடுத்த மின் தடை
பூட்டிய வீட்டுக்குள் ஏ.சி. இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்ததால் அவர் கள் இறந்தும் வெளியே துர்நாற்றம் வீசாமல் இருந்து உள்ளது. நேற்று மின்சார தடை ஏற்பட்டதால் ஏ.சி. சில மணி நேரம் ஓடவில்லை. இதனால் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அதன் மூலம் குழந்தைகள் இறந்து கிடப்பது அம்பலமானது.
வீட்டுக்குள் சிறை
கதவை பூட்டி செல்வார் ரவி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளுக்கு வேண்டிய உணவுகளை செய்து வைத்து விட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விடுவார்.
வேலை விஷயமாக சில நாட்கள் ரவி வெளியூர் சென்று விட்டு வர வேண்டும் என்றால் தனது பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு செல்வார்.
பள்ளிக்குச் செல்ல தடை
தனது மனைவி மகேஸ்வரி தனது பிள்ளைகளை அழைத்துச் சென்று விடாமல் இருக்க கடந்த ஒரு வருடமாக தனது பிள்ளைகளை அவர் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. தனது பிள்ளைகளை அதிகளவில் வீட்டுக்கு வெளியே வர விடமாட்டார். அக்கம், பக்கத்தில் இருப்பவர்களுடன் பழகவோ, பேசவோ விடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
மூச்சுத்திணறி இறந்தனரா?
வழக்கம் போல ரவி வெளியே செல்லும் போது கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன், சிறுமி இருவரும் இறந்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவி பிடிபட்டால்தான் இருவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
பூட்டிய வீட்டுக்குள் சிறுவன், சிறுமி இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் மதுராவயல் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.