பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 2 விவசாயிகள் சுருண்டு விழுந்து மரணம்.. நாகையில் அடுத்தடுத்து சோகம்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் 2 விவசாயிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். நாகையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடந்து வருவதால் கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.
நாகப்பட்டினம்: பயிர்கள் கருகிய சோகத்தில் அடுத்தடுத்து 2 விவசாயிகள் நாகையில் மரணம் அடைந்துள்ளதால் நாகை மாவட்டத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது. பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், விவசாயிகளின் மரணம் தொடர்ந்து வருவது அனைவரையும் வேதனை அடையச் செய்திருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது மருதூர். இங்கு வசித்து வந்தவர் வேதய்யன். இவர் குத்தகை எடுத்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்திருந்தார். வறட்சியின் காரணமாக பயிர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார் வேதய்யன். இந்நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் காத்தய்யன். 65 வயதான இவர் வாய்மேட்டை சேர்ந்த விவசாயி. 2 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்திருந்த இவர், பயிர் கருகிய அதிர்ச்சியில் இன்று மரணம் அடைந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அடுத்தடுத்து 2 விவசாயிகள் உயிரிழிந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் விவசாயிகள் மரணங்கள், உறவினர்களின் கதறல்களும் தமிழக அரசுக்கு மட்டும் எட்டாமலேயே உள்ளது. விவசாயிகளின் மரணத்தை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.