சென்னை: கட்டிட சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
சென்னை: சென்னை பாரிமுனையில் பழங்கால கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் பலியானாகியுள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டார்.
சென்னை பாரிமுனை, மலையப்பெருமாள் தெரு வில் சிவப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான ஓரடுக்கு ஓடு வேய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வெல்லமண்டி மற்றும் காய்கறி கடை உள்ளது. கட்டிடத்தின் பின்பக்கம் சிறிய அறை ஒன்று உள்ளது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட இந்த அறையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமார்(50) என்பவர் வாடகைக்கு எடுத்து டிபன் கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு ஞாயிற்றுகிழமை என்பதால் சீக்கிரமே டிபன் கடையை மூடிவிட்டு அறைக்குள் பொருட்களை அடுக்கும் வேலையில் குமாரும் அவரது நண்பர் சுபாஷ்(25) என்பவரும் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது திடீரென குடவுனின் ஒருபகுதி பக்கசுவர் சரிந்து டிபன் கடை மீது விழுந்தது. இதனால் டிபன் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் உடைந்து இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் குமாரும், சுபாஷும் சிக்கி அலறினர். இதே போல் கட்டிடத்தின் மறுபக்கம் உள்ள குளியலறையில் ராஜு(50) என்பவரும் சிக்கிகொண்டார்.
இவர்கள் போட்ட சத்தத்தை கேட்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்க ஓடி வந்தனர். தகவல் அறிந்ததும் எஸ்பிளனேடு, துறைமுகம், பூக்கடை பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி மூவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே குமார் பலியானார். மருத்துவமனையில் சுபாஷ் பலியானார். ராஜு எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டிடம் இடிந்த சத்தம் கேட்டவுடன் வெளியே ஓடிவந்ததால் உயிர் பிழைத்ததாக ராஜு குறிப்பிட்டார். கட்டிட சுவர் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையில் பாதிக்கப்பட்டு விழுந்திருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் கூறினர். இடிந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். விபத்து ஞாயிற்றுக்கிழமை நடந்ததால் உயிர் சேதம் குறைவாக இருந்தது. மற்ற நாட்களாக இருந்திருந்தால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.