தேனி அருகே மணல் லாரி மோதி விபத்து: 2 போலீசார் பரிதாபமாக பலி
தேனி அருகே நடந்த சாலை விபத்தில் இரண்டு காவலர்கள் பரிதாபமாக பலியாகினர்.
தேனி: தேனி மாவட்டம் தேவதானபட்டினம் அருகே மணல் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காவலர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர்.
தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சிவனாண்டி (வயது 30). கூடலூரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் சங்கீத்குமார் (30) இவர்கள் இருவரும் பழனி பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர். இன்று அதிகாலை அவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
இவர்களது வாகனம் தேனி மாவட்டம் தேவதானபட்டினம் அருகே வந்து கொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிவனாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சங்கீத்குமார் க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.