ராமேஸ்வரம் மீனவர் போராட்டம்... ஆதரவு தெரிவிக்க சென்ற அதிமுக எம்.பி. கார் மீதும் தாக்குதல்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையான ஒன்று. அவ்வாறு கைது செய்யப்படும் போது, மீனவர்களோடு அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பின்னர் சில மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு, அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிப்பது இல்லை. இவ்வாறு இலங்கை கடற்படையால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 95 படகுகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், இலங்கை கடற்படையின் இந்த செயலால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி நேற்று, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதில், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 89 விசைப்படகுகள், 6 நாட்டுப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட 18 படகுகளின் உரிமையாளருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவும், சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், பராம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதி அடைக்கலம் ஆகியோர் தலைமை தாங்கினர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசுராஜா எமரிட், சகாயம், நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன், பாம்பன் பரதர் நல பேரவை தலைவர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக, திமுக, அதிமுக கட்சியினர் உள்பட ஏராளமான மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மணிகண்டனுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அன்வர் ராஜாவின் வருகைக்காக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் கண்ணாடி உடைந்தது.
இதைத்தொடர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டவர்கள் இருதரப்பாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு இருதரப்பினரையும் சமாதானப் படுத்தினர். பின்னர் தொடர்ந்து உண்ணாவிரதம் நடந்தது.
அதனைத் தொடர்து போராட்டத்தில் கலந்து கொண்டார் அன்வர் ராஜா. அப்போது அவர் பேசுகையில், "மீனவர்களின் கோபமும், ஆவேசமும் நியாயமான ஒன்று தான். மீனவர்களுக்காகவும், மீனவர்களின் பிரச்சினைக்காகவும் கடந்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 11 முறை பேசியுள்ளேன். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கூட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டு வர வேண்டும், நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார். மீனவர்களுக்கு என்றும் தமிழக முதல்வர் பாதுகாவலனாக இருந்து செயல்படுகிறார். மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தருகிறோம்" என்றார்.
போராட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அன்வர் ராஜா, ‘இந்தத் தாக்குதலுக்கு திமுகவே காரணம்' எனக் குற்றம் சாட்டினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.