நகைக்காக 3 பேர் கொலை.. 2 பேருக்கு தூக்கு தண்டனை.. நாமக்கல் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!
நகைக்காக டாக்டர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளள்ளது.
நாமக்கல்: நகைக்காக டாக்டர் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
நாமக்கல் முல்லை நகரைச் சேர்ந்த டாக்டர் சிந்து, அவரது தாய் சத்யவதி, பாட்டி விசாலாட்சி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அவர்கள் 3 பேரும் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் அணிந்திருந்த 28 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.
கொலை, கொள்ளை வழக்குகள்
இதில் இளங்கோவன், சந்தானம், காமராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மேலும் பல கொலை கொள்ளை வழக்குகள் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்தது நிரூபணம்
இதுதொடர்பான விசாரணை நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் லாரி டிரைவர் இளங்கோவன் மற்றும் காமராஜ் ஆகிய 2 பேரும் கொலை செய்தது நிரூபணமானது.
நகைக்காக கொலை
மேலும் 28 பவுன் நகைக்காக மருத்துவர் சிந்து, அவரது தாய் சத்யவதி, பாட்டி விசாலாட்சி ஆகியோரை கொன்றதும் உறுதியானது. இந்நிலையில் இந்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
2 பேருக்கு தூக்கு தண்டனை
கொலையாளிகள் இளங்கோவன் மற்றும் காமராஜ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. ஏற்கனவே மற்றொரு வழக்கில் இருவருக்கும் 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.