சென்னையில் பொறியாளரிடம் கொள்ளையடித்த இரண்டு திருநங்கைகள்!
சென்னை: சென்னையில் பொறியாளர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்த இரண்டு திருநங்கைகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சாவீஸ் சாலை அருகே சென்றபோது 2 திருநங்கைகள் ஜெய்கணேசை வழிமறித்து அவர் அணிந்திருந்த 1.5 பவுன் தங்கநகை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இதுகுறித்து ஜெய்கணேஷ் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள், ஜெய்கணேசை வழிமறித்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பிடிபட்ட திருநங்கைகள் திருவேற்காடு அடுத்த நூம்பலைச் சேர்ந்த காவ்யா, ஸ்ரீஜா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரவாயல் மேம்பாலம் அருகே திருநங்கைகள் சிலர் இரவு நேரங்களில் அதிக அளவில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications