ஒரு கணவர், இரண்டு மனைவிகள் – ஒரே அடிதடி சண்டை!
சென்னை: சென்னையில் காதல் கணவருக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் முனுசாமி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (29). பட்டதாரியான இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. இவர், தான் காதலித்த பெண்ணை மணந்து கொண்டார்.

ஹோட்டல் அதிபரின் மகள்:
இவரது மனைவி ஹோட்டல் அதிபரின் மகள் ஆவார். ரூபாய் 50 லட்சம் செலவில் மிகவும் ஆடம்பரமாக இவர்கள் திருமணம் நடந்தது. ஆனால் இவர்களின் இல்லற வாழ்க்கையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

ஒன்னுக்கு ரெண்டு:
இந்த நிலையில் ரமேஷ்குமார் ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்தவர் என்ற தகவல் இவர்கள் வாழ்க்கையில் மேலும் புயலை கிளப்பியது.

பஞ்சாயத்தான திருமணங்கள்:
ரமேஷ்குமார் தனது முதல் காதல் திருமணத்தை மறைத்து 2 ஆவது காதல் திருமணம் செய்துள்ளார். 2 மனைவிகளும் ரமேஷ்குமாரை சொந்தம் கொண்டாடினார்கள். இதனால் இந்த திருமண பஞ்சாயத்து விவகாரம், அயனாவரம் அனைத்து மகளிர் போலீசில் விசாரிக்கப்பட்டது.

ஒன்று சேர்ந்து வாழ சம்மதம்:
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகலா இது பற்றி விசாரித்தார். விசாரணையின் ஒரு கட்டத்தில் 2 மனைவிகளும் ரமேஷ்குமாருடன் ஒன்று சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.

நம்பர் ஒன் போதும்:
ஆனால் ரமேஷ்குமார் அதற்கு சம்மதிக்காமல் 2 ஆவது மனைவி வேண்டாம் என்றும், முதல் மனைவியோடு வாழ்கிறேன் என்றும் உறுதிபட கூறி விட்டார்.

கைது செய்யப்பட்ட ரமேஷ் குமார்:
இதனால் 2 ஆவது மனைவியின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர். ரமேஷ்குமார் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெற்றோரும் சிறையில் அடைப்பு:
அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்கள். மேற்கண்ட தகவல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications