மக்களே, உங்களோட கோபத்துக்கு அளவே இல்லையா.. அப்பாவிகளைப் போட்டு இப்படியா அடிப்பது?
மதுரை: மதுரையில் ஒரு தப்பு நடந்து விட்டது. திருடர்கள் என்று நினைத்து விபத்தில் சிக்கிய அப்பாவிகளைப் போட்டு அடித்துத் துவைத்து விட்டார்கள் சிலர்.
கோச்சடை, தேனி மெயின்ரோடு பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு பெண் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வந்த பைக் அவர் மீது மோதி விட்டது.
இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடி வந்து அந்த வாலிபர்களைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இவர்கள் சங்கிலித் திருடர்கள் என அவர்கள் கூற அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கூடி விட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய வந்தது. அவர்களது பெயர் கார்த்தி, பிரஷாந்த் என்றும் ஜெய்ஹிந்து புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கரிமேடு போலீஸார் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.