ஆண்டவனை கூட பார்த்துவிடலாம், ஆனா... ஜெ. குறித்து சுப.உதயகுமார்
மயிலாடுதுறை: ஆண்டவனை கூட பார்த்துவிடலாம் . ஆனால் தமிழக முதல்வரைத்தான் பார்க்க முடியவில்லை என அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அதில், அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து பயனற்ற விஷயங்களுக்காக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 6 மாதங்களாக ஏன் அணுஉலை இயங்கவில்லை; அணுஉலையினால் ஆபத்து ஏற்படுமா என மத்திய அரசிடம் முதலமைச்சர் ஏன் கேள்வி எழுப்பவில்லை.
ஆண்டவனை கூட பார்த்துவிடலாம் . ஆனால் தமிழக முதல்வரை பார்க்க முடியாது'' என இவ்வாறு தெரிவித்தார்.
முன்பு கூடங்குளம் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது முதல்வர் ஜெயலலிதா அழைப்பின்பேரில் உதயக்குமார் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் உக்கிமடைந்தது. அதன் பின்னர் போராட்டக் குழுவினரால் இதுவரை ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.