பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை எப்போது? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த முக்கிய அப்டேட்!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சிறப்பு பொருட்களுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரொக்கத் தொகை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ரூ. 238.92 கோடி செலவில், தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. ஆனால் ரூ.1000 பரிசு தொகை அறிவிக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரொக்கம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் ரொக்க தொகை அறிவிக்கப்படாததற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.
அதாவது, கடந்த டிசம்பரில் வடதமிழகத்தை ஒட்டி கடந்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் பொருள் இழப்புகள் அதிக அளவில் இருந்தன. குறிப்பாக வடசென்னையின் எண்ணூர் பகுதியில், வெள்ளத்தோடு சேர்ந்து கச்சா எண்ணெய் கழிவும் வெளியேறியதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த பாதிப்பிலிருந்து அவர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டது. எண்ணூர் மக்களுக்கு கூடுதல் நிவாரண தொகை வழங்கப்பட்டது. அதேபோல இந்த புயல் பாதிப்பு சலசலப்பு ஓய்வதற்குள் தென் தமிழகத்தை கடுமையான மழை வெள்ளம் தாக்கியது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.
எனவே இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும் ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இப்படியாக ஏராளமான நிதி வழங்கப்பட்டதால், நிதி நிலைமை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. எனவேதான் இந்த முறை பொங்கலுக்கு ரொக்கம் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
அதாவது, “பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும்” என்று கூறியுள்ளார். எனவே ரொக்க தொகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications