கபடிப் போட்டியில் பங்கேற்ற மாணவி மயங்கி விழுந்து பலி- திருப்பூரில் விபரீதம்!
உடுமலை: திருப்பூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தனியார் கல்லூரியில் கடந்த 20 ஆம் தேதி முதல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கான கபடி போட்டி தொடங்கியது.
இரண்டு அணிகள்:
இந்த போட்டியில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மாணவிகள் அணியினரும், கொழுமம் தனியார் பள்ளி அணியினரும் விளையாடினர்.
மயக்கமடைந்த மாணவி:
அரசு மேல்நிலைப்பள்ளி அணியில் 8 ஆம் வகுப்பு மாணவி தீபா எதிரணி பகுதிக்குள் பாடிச் செல்லும் முன் மயக்கமடைந்தார்.
இறந்து போன தீபா
அதிர்ச்சியடைந்த குறுமைய விளையாட்டுப்போட்டி அமைப்பாளர்கள் தீபாவை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கதறிய பெற்றோர்:
அதிர்ச்சியடைந்த போட்டி அமைப்பாளர்கள் இது குறித்து தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெற்றோர் மருத்துவமனையில் மகளின் உடலை பார்த்து கதறிதுடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
சகமாணவிகள் சோகம்:
சகமாணவிகள் மருத்துவமனையின் முன் சோகத்துடன் குவிந்தனர். தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கரோலின், கோட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை:
அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.