ஓபிஎஸ்ஸுடன் பேச நிபந்தனைகள் கிடையாது.. இரட்டை இலை மீண்டும் கிடைக்கனும்… செல்லூர் ராஜு திட்டவட்டம்
ஓபிஎஸ் அணியுடன் பேச நிபந்தனைகளோ கோரிக்கைகளோ எதுவும் இருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுக மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் நிபந்தனைகள் எதுவும் இருக்காது என்றும் இரட்டை இலை மீண்டும் கிடைக்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
இன்று சென்னையில் ஆஜரான அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ஐஎன்எஸ் போர்க்கப்பலில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கான அழைப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விடுத்தார். அதன்படி சென்னையில் ஆஜரான அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அனைவரும் இன்று இந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தனது குடும்பத்தினருடன் இந்தக் கப்பலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மகிழ்ச்சி
அப்போது செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது: குடும்பத்துடன் கப்பலில் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே போன்று ஓபிஎஸ் மற்றும் எங்களது அணிகள் இணைப்புக் குறித்துப் பேசப்போவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. தொண்டர்களும் இதைத்தான் எதிர்ப்பார்த்துள்ளனர்.
அண்ணன் தம்பி சண்டை
அதிமுக ஒன்று பட வேண்டும். இரு அணிகளும் ஒன்றிணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும். நிபந்தனையற்ற வகையில் பேச தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் இன்று முதன்மையான அமைச்சர்களை அழைத்து ஒரு குழு அமைத்துள்ளார்.
நிபந்தனை இருக்காது
அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனை நடந்து பின் பேச்சுவார்த்தை நடத்தும் போது நிபந்தனை விதிப்பதும் கோரிக்கை வைப்பதும் சரியாக இருக்காது. அது எந்தத் தரப்பில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையில் நிபந்தனை இருக்காது என்றுதான் நான் கருதுகிறேன்.
இரட்டை இலை
அதிமுக கட்சி மீண்டும் இணைய வேண்டும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை நடக்கும். இரண்டு அணிகளும் இணைந்தால் கட்சி பலம் பெரும். இரட்டை இலை கிடைத்துவிடும். தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும் என்று செல்லூர் ராஜு கூறினார்.