விவசாயத்திற்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயத்திற்கு இந்த ஆண்டும் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Uninterrupted power supply for agriculture: Jayalalitha

''நாட்டின் முதன்மைத் தொழிலான வேளாண் தொழிலை ஊக்குவிப்பதிலும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதிலும் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6ஆம் தேதி) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்தும், கர்நாடக மாநிலத்திலிருந்து பெறப்பட வேண்டிய தண்ணீர் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருக்கும் போது, மேட்டூர் அணை நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலம் காவேரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இதில், நிலத்தடி நீர் ஆதாரமுள்ள குழாய் கிணறு மற்றும் வடிமுனை குழாய் ஆகியவற்றின் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், தற்போது 41.28 அடி மட்டுமே நீர் உள்ளது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 10.16 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் தர வேண்டும். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, 10 டி.எம்.சி. அடி தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து கிடைத்தாலும் மேட்டூர் அணையில் 51.28 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு, குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது.

கடந்த ஆண்டு 19 விழுக்காடு அளவுக்கு மழை குறைவாக பெய்த போதிலும், மண்வளத்தை மேம்படுத்தியதன் மூலமும், நவீன உத்திகளை கையாண்டதன் மூலமும், தேவையான விதை, நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவற்றை இருப்பில் வைத்து உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்ததன் மூலமும், இதுவரை இல்லாத சாதனை அளவாக 103.38 லட்சம் மெட்ரின் டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவான 161.8 மில்லி மீட்டருக்குப் பதிலாக 174.2 மில்லி மீட்டர் மழை கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும். நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில், ஒவ்வொருவருக்கும் 600 அடி எச்.டி.பி.இ. குழாய்கள் 7000 விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

டெல்டா பகுதிகளில் காவேரி நீர் பெறப்படும் போது, வாய்க்கால் பாசனம் மூலம் அதிக அளவு நெல் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு, 100 விழுக்காடு மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைத்து, வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா பகுதிகளில் 100 விழுக்காடு மானியத்தில் நெல் நடவு இயயதிரங்களை 200 விவசாயிகள் குழுக்களுக்கு வழங்கி, நடவுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலையாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் சரியான தருணத்தில் களையெடுத்து, உயர் மகசூல் பெற வழிவகை செய்யும் வகையில், 100 விழுக்காடு மானியத்தில் இயந்திரக் களையெடுக்கும் கருவிகள் 200 விவசாயக் குழுக்களுக்கு வழங்கப்படும். குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில் நுட்பங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயர் மகசூல் தரும் இடுபொருட்களான நெல் நுண்ணூட்டக் கலவை, துத்தநாக சல்பேட் ஆகியவை தலா 1 லட்சம் ஏக்கர் பரப்பிளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் தலா 50,000 ஏக்கர் பரப்பளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும். இதே போன்று, 60,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஜிப்சம் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும். மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 32 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகளினால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும் வழிவகை ஏற்படும்''

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+