தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை முழு உரிமையோடு நடத்த வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை முழு உரிமையோடு நடத்த வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை முழு உரிமையோடு நடத்த வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவதற்கு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு முழு பக்கபலமாக இருக்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை முழு உரிமையோடு நடத்த வேண்டும், அதன் மீதுள்ள தடைகள் அகற்ற வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். அதனுடைய விளைவாக, ஒட்டுமொத்த தமிழர்களுடைய ஆதரவும் ஜல்லிக்கட்டிற்கு உருவாகியது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் முழு நம்பிக்கை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வரிடன் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக சட்ட ரீதியான சூழ்நிலைகளை விளக்கி, தமிழக அரசாங்கமே அவசர சட்டம் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று எடுத்து கூறி, அதற்கு தன்னுடைய முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருவேன் என்று உறுதி கொடுத்து ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை முப்பது மணி நேரத்திற்குள்ளாக நிறைவேற்ற செய்துள்ளார்கள். இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சரித்திர நிகழ்வுக்காக போராடிய ஜல்லிக்கட்டு அமைப்பை சேர்ந்த அனைவருக்கும், போராடிய அனைவருக்கும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை உடனடியாக கொண்டு வந்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநருக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டினை தமிழினம் உள்ளவரை தொடர்ந்து நடத்துவதற்கு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு முழு பக்கபலமாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
ஜல்லிக்கட்டு நடத்த பெற்றுள்ள உரிமையை பயன்படுத்தி ஜல்லிக்கட்டினை நடத்தவும், அந்நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொள்ளவும், போராட்டக்களத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக வாடிவாசல் நோக்கி பயணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். போராட்டக்களத்தில் உள்ள என் தமிழ் சொந்தங்களை இப்போராட்டத்தை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications