“நாமும் வாழ்வோம்... பிறரையும் வாழ வைப்போம்”... இந்து ஆன்மிக கண்காட்சியில் மத்திய அமைச்சர் பேச்சு
சென்னை: சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனில் ஆனந்த் தவே, "இந்து தத்துவப்படி நாமும் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்" என்றார்.
8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 450 அரங்குகளையும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தக் கண்காட்சியில் தினந்தோறும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று இயற்கை வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் 1,008 துளசி செடிகளை போற்றி வணங்கும் 'துளசி வந்தனம்', 'கோ வந்தனம்' (பசு வந்தனம்) மற்றும் 'கஜ வந்தனம்' (யானை போற்றுவது) ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

துளசி மாடம்...
இதற்காக மேடையில் பெரிய அளவிலான துளசி மாடம், அதன் அருகில் கிருஷ்ணர் சிலை, அதனை சுற்றி பெரிய யானை பொம்மைகள் மற்றும் பசு கன்றுகளுடன் நிற்பது போன்ற பொம்மைகள் அமைக்கப் பட்டிருந்தது.

பயனுள்ள தகவல்கள்...
இந்த நிகழ்ச்சியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் ஆனந்த் தவே தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பசு வந்தனம், ‘கஜ வந்தனம்' மற்றும் ‘துளசி வந்தனம்' செய்வதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக மாணவர்கள் நன்கு பயனடைவார்கள்.

பசுவின் பயன்கள்...
குழந்தைகளுக்கு பசு பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. பசுவிடம் இருந்து கிடைக்காத சொத்தே இல்லை. குறிப்பாக பால் மட்டுமல்லாது சாணம், கோமியம் போன்றவை நம் உடல் நலனுக்கு அதிக பலனளிக்கிறது. எனவே குடும்பத்தில் ஒருவராகத் தான் பசுவை பார்க்க வேண்டும். ஒரு பசு இருந்தால் 30 ஏக்கர் நிலத்துக்கு தேவையான உரம் கிடைக்கும் என்று பாலேக்கர் என்ற விஞ்ஞானி கூறி உள்ளார். பசு இறந்தாலும் அந்த இடத்தில் தீங்கு விளைவிக்காத உரம் கிடைக்கிறது.

யானை...
நாம் யானையைவிட மிகப்பெரிய உயிரினத்தை நிலத்தில் பார்க்க முடியாது. இதனுடைய தும்பிக்கையால் புழுதியில் கிடக்கும் ஊசியையும் மற்றும் ஆலமரத்தையும் தூக்கி எடுக்க முடியும். ஆக மனிதனுக்கு உதவும் விலங்காக யானை திகழ்கிறது. நாம் அதற்கு தொந்தரவு செய்யாத வகையில் அது யாரையும் தொந்தரவு செய்வதில்லை.

துளசியின் மகத்துவம்...
துளசியில் உள்ள 5 பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய் இவை மகத்துவமானதுடன், மருத்துவ குணம் படைத்தவை. இதனையும் பள்ளி மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்து தர்மம் எல்லோரையும் வாழ வைக்கும் தர்மமாக இருக்கிறது. எனவே இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம் என்ற கருத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

நன்றி...
மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த கண்காட்சியை அமைத்த அமைப்பாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மட்டும் அல்லாது நாடு முழுவதும் இந்த கண்காட்சியை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications