சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதா? பொன்னார் கடும் எதிர்ப்பு
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூரியதாவது:
ஒரு கோயில் இருக்கும் இடத்தின் தன்மையை பொறுத்து சில விதிமுறைகள் வகுக்கப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் பாதை அடர்ந்த காட்டுவழி. அந்த பாதை பெண்களுக்கு உகந்தது அல்ல என்பதால் வயது வரம்பை நிர்ணயித்து இருக்கிறார்கள்.
ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களின் கட்டுப்பாடுகள் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. பிற மதங்களிலும் பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப்பற்றி விமர்சிக்கவோ, தலையிடவோ அதிகாரம் இல்லை.
அதே போல் இந்துக்கள் வழிபாட்டு முறைகளையும் மீறக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு? எந்த ஐயப்ப பக்தரும் மனைவியை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று உரிமை கோருவதில்லை.
நாத்திகவாதிகள், பொதுவுடமைவாதிகள் தலையிட எந்த உரிமையும் இல்லை. சில இடங்களில் பெண்கள் மட்டுமே வழிபடும் உரிமை உள்ளது. அங்கு ஆண்கள் செல்லமுடியாது.
ஐயப்பன் கோவில் சுற்றுலாதளம் கிடையாது. அங்கு செல்ல சுயக்கட்டுப்பாடு தேவை. எரிமேலியில் வாவர் தர்காவுக்கு இருமுடி கட்டு சுமந்தபடி பக்தர்கள் செல்கிறார்கள். அதற்காக ஏனைய தர்காகளிலும் அப்படி செல்வோம் என்று அடம் பிடிக்க முடியுமா?
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.