பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை
தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து அனைத்து ஆளுநர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தமிழக மாவட்டங்களும் சென்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாவட்டங்களின் வளர்ச்சிப்பணி மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி ஊழல் புகாரில் சிக்கினார். பல்கலைக்கழகப் பணி நியமனங்களில் முறைகேடு செய்திருப்பதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளார். இதில் மருத்துவ, வேளாண், கால்நடை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துணைவேந்தர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த பின்னரே, இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications