கருணாநிதி மீது பாச மழை பொழிந்த "ஆண்டவர்"!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆண்டவர் என்றுதான் அழைப்பது வழக்கம்.
கருணாநிதி, திருவாரூரில் தட்சிணாமூர்த்தியாக 1924-இல் பிறந்தார். நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.
தனது 13-ஆவது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் குறித்து மக்களுக்கு தெரியாத சில உண்மைகள் உள்ளன. அவற்றை பார்ப்போம்.
எத்தனை முறை
கருணாநிதி 13 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை முதல்வராகவும், 10 முறை திமுக தலைவராகவும் இருந்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை இந்த சாதனையை யாரும் செய்ததில்லை.
அதிகாலையில் எழுதல்
உதயசூரியனை கட்சியின் சின்னமாக வைத்துள்ள கருணாநிதி அது உதயமாகும் முன்னரே அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். பின்னர் வீட்டிலேயே நடைபயிற்சி மற்றும் யோகா பயிற்சியை செய்வது வழக்கம். தனது அலுவல்களை தொடங்குவதற்கு முன்னர் அத்தனை செய்தித்தாள்களையும் ஒரு வழி விடாமல் படித்து விடுவாராம்.
சரி செய்ய உத்தரவு
கருணாநிதி முதல்வராக இருந்த போதெல்லாம் அவர் படிக்கும் செய்தித்தாள்களில் மக்கள் பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு சரி செய்ய சொல்வாராம்.
எம்ஜிஆர் வைத்த பெயர்
அன்று கருணாநிதியை எம்ஜிஆர் ஆண்டவரே என்றுதான் அழைத்தாராம். அதுபோல் சிவாஜி கணேசனும் மூனாகானா (மு.க. என்பதன் சுருக்கம்) என்று அழைத்தது வழக்கம்.