கொலை செய்யப்பட்டார் விஷ்ணுபிரியா... வீட்டுக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு
நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலை செய்யப்பட்டதாக அவரது வீட்டிற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18-ந் தேதி திருச்செங்கோட்டில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுப்பிரியா, உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு மர்மகடிதம் ஒன்று வந்துள்ளது. சேலத்தில் இருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து பரபரப்பான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதாவது, ‘கோகுல்ராஜின் கொலை வழக்கில் தொடர்புடையவர் தான் விஷ்ணுபிரியாவை கொலை செய்துள்ளார். கொலை செய்தவன் கையில் மந்திரி, போலீஸ் துறை இருக்கிறது. உடன் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்தவர்கள் தான் விஷ்ணுபிரியாவை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு இருக்க வேண்டும் (யுவராஜிக்கு சாதகமான போலீஸ்காரர்கள்). மறுபிரேத பரிசோதனை செய்து வழக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, மேலும் இது தொடர்பாக கூறுகையில், "விஷ்ணுபிரியாவின் சாவை கொச்சைப்படுத்த வேண்டாம். அவர் உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்.
என்னுடைய மனைவி, மகளிடம் ஒரு போட்டோவை காண்பித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதுதவிர என் மகள் எழுதிய 9 பக்க கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் 2 பக்கம் மட்டுமே என்னுடைய மகள் விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்ற பக்கங்கள் யார்? எழுதியது என்று தெரியவில்லை என்று கூறினோம். என்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினால் கூடுதல் விவரங்களை தெரிவிப்பேன்" என்றார்.












Click it and Unblock the Notifications