காற்றாலை மின் உற்பத்தி சரிவு: ஒரு மணி நேர மின்வெட்டு அமல்
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததால், மீண்டும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. சென்னையிலும் பல இடங்களிலும், குறைந்த அளவில் மின்வெட்டு அமலானது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்த பல மணி நேர மின்வெட்டு, புதிய மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால், வெகுவாகக் குறைக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வந்த கூடங்குளம், வள்ளூர் மின் நிலையங்களிலும், தமிழக மின் வாரியம் சார்பிலான மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்களிலும், மின் உற்பத்தி தொடங்கியது.
இதனால் தேவைக்கேற்ற மின்சாரம் உற்பத்தியானதால், தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், மின் வெட்டு நீக்கப்பட்டு, முழுமையான மின்சாரம் வழங்கப்பட்டுவந்தது.
மிரட்டும் மின்வெட்டு
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பல்வேறு மாவட்டங்களில், மின் விநியோகம் அவ்வப்போது தடைபட்டது.
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், பல பகுதிகளில் வியாழக்கிழமையன்று ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் தடைபட்டது. வியாழக்கிழமை நிலவரப்படி, 18 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், மின் தடையால் சமாளிக்கப்பட்டது.
கொசுக்கடி, புழுக்கம்
நெல்லை மாவட்டத்தில் மின் வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் மின்தடை ஏற்பட்டவுடன் கொசுக்கள் படை எடுத்து வருவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள்
இந்த நிலையில் வரும் 26ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது இதற்காக மாணவர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் மின்தடை நேரம் அதிகமாகி விட்டதால் அவர்கள் தேர்வுக்கு சரியாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைவு
தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகளில், வெறும் 20 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. புதன் நள்ளிரவில் வெறும் 14 மெகாவாட் தான் கிடைத்தது.
இயந்திரக் கோளாறு
இதேபோல் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறால் 600 மெகாவாட் உற்பத்தியும், எண்ணூர் மின் நிலையத்தின் மூன்று அலகுகளில் 280 மெகாவாட், ஆந்திராவிலுள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் 500 மெகாவாட், கர்நாடகா கைகா அணு மின் நிலையத்தில் 220 மெகாவாட் உற்பத்தி பாதித்துள்ளது. இது நீண்ட கால பிரச்சினையல்ல. இருப்பினும் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்த பாடில்லை.