நீளும் தீண்டாமை.. ஆண்டிப்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
அங்கன்வாடி மையத்திற்கு பிள்ளைகளை பெற்றோர் அனுப்ப மறுக்கின்றனர்.
ஆண்டிப்பட்டி: எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த தீண்டாமை மட்டும் மாறவே மாறாதா என்ற எண்ணம் மேலோங்கியே வருகிறது. அது ஆண்டிப்பட்டியிலும் தற்போது தொடர்கிறது.
ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். பிள்ளைகள் அதிகமாகி விட்டதால் இரண்டு அங்கன்வாடி மையமாக பிரிக்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்தார்கள்.
திறக்கப்பட்ட புதிய மையம்
அதாவது 50, 50 பிள்ளைகளாக பிரிக்கலாம் என ஆலோசனை செய்தார்கள். அதற்காக பிள்ளை முகம்பட்டி என்ற கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை கட்ட ஆரம்பித்தார்கள். இது 2 மாசத்துக்கு முன்னாடிதான் திறக்கப்பட்டது. 54 குழந்தைகள் இந்த புதிய மையத்தில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள குழந்தைகள் ஏற்கனவே இருந்த மையத்திலேயே இருந்தார்கள்.
அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்
ஆனால் இந்த 54 குழந்தைகளில் 20 குழந்தைகள்கூட இப்போது வருவது இல்லையாம். ஏன் என்றால், இந்த பிள்ளைமுகம்பட்டியில் வசிப்பவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாம். அதனால் இந்த புதிய மையத்துக்கு மற்ற சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு நியாயமே
இதுபற்றி பெற்றோர்களிடம் கேட்டால் அந்த மையத்தில் மின்சார வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி எதுவுமே இல்லை என்று பதில் வருகிறது. ஒருவகையில் பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்பும், புகாரும் நியாயமே. சின்ன சின்ன குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் இந்த அடிப்படை வசதிகள் இல்லையென்றால் எந்த பெற்றோருக்குத்தான் அனுப்ப மனம் வரும்? எனவே இவ்வளவு செலவழித்து புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டிருக்கும்போது, அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.
குழந்தைகளை விடுவதில்லை
அதேபோல இந்த புகார் குறித்து பிள்ளைமுகம்பட்டி கிராமத்தினரை கேட்டால், "நாங்கள் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே மற்ற சமுதாயத்தினர் அவர்களது குழந்தைகளை அனுப்புவதில்லை. தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அருகில் கூட அவர்கள் குழந்தைகளை விட மறுக்கிறார்கள். ஆனால் இந்த அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமாவு, முட்டை போன்ற பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு பெற்றோர்கள் போய்விடுகிறார்கள். " என்று குற்றம் சாட்டுகின்றனர்.
எத்தனை பெரியார்கள்
இன்றைய காலகட்டத்திலும் தீண்டாமையின் வடிவங்கள் நம் மாநிலத்தில் நீண்டு கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கண்டறியப்படாத ஏராளமான தீண்டாமைகளும் முகமூடியை அணிந்துகொண்டு உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன. தீண்டாமை எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஏற்கவே முடியாது. இதையெல்லாம் தங்கு தடயமின்றி துடைத்தெறியவும் சுக்குநூறாக உடைத்தெறியவும், இன்னும் எத்தனை பெரியார்கள், எத்தனை அம்பேத்கர்கள், எத்தனை பாரதியார்கள் மீண்டும் தோன்ற வேண்டி இருக்குமோ? தெரியவில்லை!!