உடைந்த உப்பனாறு கரை..சூரக்காடு கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்..உயிர் மட்டுமே மிச்சம் என மக்கள் தவிப்பு
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்ததால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சூரக்காடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடமைகளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இருப்பதாக சூரக்காடு கிராம மக்கள் கூறியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாயில் கிராமம் உள்ளது. கடற்கரை கிராமமான இந்த பகுதியில் உப்பனாறு ஓடுகிறது. இந்த உப்பனாறு தேனூர், கொண்டல், ஆதமங்கலம், புங்கனூர், நிம்மேலி, மருதங்குடி, சீர்காழி, பனமங்கலம், தென்பாதி, சட்டநாதபுரம் திட்டை, தில்லைவிடங்கன், திருநகரி, புதுத்துறை, வெள்ளப்பள்ளம், திருமுல்லைவாசல், வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங்களின் வடிகாலாகவும் உள்ளது.
சென்னையில் விடாது கொட்டிய கனமழை.. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்.. அவதியடையும் பொதுமக்கள்!
ஆரஞ்ச் அலர்ட்
தமிழகத்துக்கு 13ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்து உள்ளது. நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தான் அதிகபட்சமாக 43.6 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
விளைநிலங்கள் மூழ்கின
சீர்காழி தாலுக்கா பகுதிகளில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நான்காவது முறையாக நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. பூம்புகார் சுனாமி குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் உட்புகுந்துள்ளது.
உப்பனாற்றின் கரை
உப்பனாற்றின் கரை உடைந்ததால் சூரக்காடு கிராமத்திற்குள் தண்ணீர் சூழ்ந்தது. 300க்கும் மேற்பட்ட கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்த காரணத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதுபோல ஒரு பெருமழையை கண்டதில்லை என்று கூறிய சூரக்குடி கிராம மக்கள், உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு தவித்து வருவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
நிவாரண முகாம்கள்
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்களை வெளியேற்றி மண்டபங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவுகள் சமைத்து வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.