காரில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி.. சர்ச்சையில் சிக்கிய புதுவை முதல்வர்
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரின் கார் டிரைவர் இப்ராகிம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி உள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் நாராயணசாமி இன்று வந்திருந்தார். அவரது காரைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கார்களும் பின் தொடர்ந்து வந்தன.
பின்னர் காரில் இருந்து இறங்கிய நாராயணசாமி அங்கிருந்த சென்றுவிட்டார். அப்போது அவரின் காரின் முன்பக்கத்தில் தேசிய கொடி தலைகீழாக மாற்றப்பட்டிருந்தது. தேசியக் கொடி தலைகீழாக பறப்பதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கார் டிரைவர் இப்ராகீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வரின் தனிச்செயலளர் ராஜமாணிக்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நாளுக்கு நாள் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.