ஓ.பி.எஸ். தான் முதல்வராக தொடர வேண்டும்: ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் பேட்டி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோராஞ்சிதம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தான் தொடர வேண்டும் என ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியதால் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்தார் சசிகலா. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகள் எம்.பிக்கள் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சசிகலாவிற்கு எதிராக கலகக்குரல் எழுப்பி வரும் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோரஞ்சிதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ்., நல்ல ஒரு ஆட்சியைத் தந்து கொண்டுள்ளார். மீண்டும் அவர்தான் முதல்வராக தொடர வேண்டும் என்றார்.
முன்னதாக இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மனோரஞ்சிதம் கலந்துகொள்ள வில்லை. உடல்நலக்குறைவால் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. முதல்வருக்கு குவிந்து வரும் ஆதரவு மேலும் வலுப்படும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.