குவாட்டருக்கு ஆசைப்பட்டவரை அடமானம் வைத்து ரூ.20000 வாங்கிய நபர்.. நிஜமான வடிவேலு காமெடி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வடிவேலு காமெடிக்காக செய்த சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. அதுவும் எப்படி என்றால் குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று ஒரு டெய்லரிடம் ஆசை வார்த்தை அழைத்து சென்று அவரை அடகு வைத்து 20 ஆயிரம் வாங்கிவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார் ஒருவர்..
தமிழ் திரைப்படம் ஒன்றில் இருசக்கர வாகனம் வாங்கும் இரண்டு பேர் வருவார்கள்.. நடிகர் வடிவேலுவை வைத்து விலை பேசுவார்கள். பின்னர் அவர்கள் பணம் கொடுக்காமல் ஓட்டி பார்ப்பதுபோல் இருசக்கர வாகனத்துடன் ஒடிவிடுவார்கள். கடைசியில் வடிவேலு கடைக்காரரிடம் மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்குவார்.

இதேபோன்று ஒரு மோசடி திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி நிஜத்தில் நடந்துள்ளது. அதுவும் எப்படி என்றால் கூகுள் பே மூலம் பணம் அனுப்ப வைத்து மோசடி செய்திருக்கிறார் ஒரு நபர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வாலூர் பகுதியை சேர்ந்த 35 வயதாகும் தசரதன் ( வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (47) என்பவர் அதேப்பகுதியில் டெய்லர் வேலை செய்து வருகிறார்.
டெய்லர் ஜெயபாலிடம் பேசிய இளைஞர் ஒருவர் குவாட்டர் வாங்கித்தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி செல்போன் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போதே, வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள தசரதனின் செல்போன் கடைக்கு சின்ன வேலை என்று கூறி டெய்லர் ஜெயபாலையும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கடையில் இருந்த தசரதனிடம், ஜெயபாலுடன் சென்ற இளைஞர் அவசரமாக ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி, ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே அல்லது போன் பே மூலம் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்புமாறும், கையில் பணத்தை உடனே தருவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய தசரதன் அந்த நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ரூ.20 ஆயிரத்தை போன் பே மூலம் அனுப்பி உள்ளார்.
பின்னர் அந்த நபரிடம் ரூ.20 ஆயிரத்தை கேட்டதற்கு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று எடுத்து வருவதாக கூறியுள்ளார். சந்தேகப்பட வேண்டாம் உடனே வருவேன். இதோ என்னுடன் வந்த டெய்லர் ஜெயபால் இங்கேயே நான் வரும் வரை இருப்பார் என்று கூறி, அங்கேயே அமரவைத்துவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த இளைஞர் திரும்பி வரவில்லை.
இதனால் அவருடன் வந்த ஜெயபாலும் சிறிது நேரம் கழித்து, பணம் எடுக்க சென்றவரை பார்த்து வருவதாக கூறியுள்ளளார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் தசரதன் கூச்சலிட்டு அங்கிருந்த தப்ப முயன்றவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து உட்கார வைத்திருக்கிறார்.
பின்னர் அவரிடம் விசாரித்த போது தான் நடந்த ஏமாற்றுவேலை தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்த ஜெயபால், மதுபான கடையில் இருந்திருக்கிறார். அவரிடம் ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அங்கிருந்து அழைத்து வந்துள்ளார். தனக்கும், அந்த இளைஞருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தசரதன் உடனடியாக வங்கிக்கு சென்று மர்ம நபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரத்தை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பிடிபட்ட ஜெயபாலை நாட்டறம்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேலு காமெடி நாட்டறம்பள்ளி பகுதியில் நிஜத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications