நம்ப வைத்து கழுத்தறுப்பதில் கைதேர்ந்தவர் ஜெயலலிதா: வைகோ சாடல்
சென்னை: நம்ப வைத்து கழுத்தறுப்பதில் கைதேர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு என மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் 234 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அதே நேரத்தில் அதிமுகவின் கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: தமாகா தலைவர் வாசன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை நம்ப வைத்து அதிமுக ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் வாசனை சேர்ப்பது பற்றி நான் கூறமுடியாது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே அதுபற்றி தெரியவரும் என வைகோ தெரிவித்தார்.
முன்னதாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் சேருமாறு வாசனுக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டன. ஆனால் தமாகா அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புவதாக செய்திகள் வெளியாகின.
அதிமுக தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டும் ஒதுக்குவதாக தெரிவித்தனர். இதனால் தமாகா அதிமுகவுன் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications