மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் விரிசல்: திருவாரூர் கூட்டத்தில் வைகோ புதிய கூட்டணி அறிவிப்பு
சென்னை: மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்திற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது என்பதில், திடீர் குழப்பம் உருவாகியுள்ளதால், கூட்டணிக்குள் குழப்பமும், புகைச்சலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சி வெளியேறியுள்ள நிலையில், திருவாரூரில் இன்று நடக்கும், கூட்டத்தில் 4 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி அறிவிப்பு வெளியாகிறது.
அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காந்திய மக்கள் இயக்கம் ஆகிய, ஆறு கட்சிகள் இணைந்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை உருவாக்கின.
இலங்கை தமிழர்கள் பிரச்னை,ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, தொடர்பாக நடைபெற்ற சில கூட்டங்களில், ஆறு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக பங்கேற்றனர். இந்நிலையில், 'மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை, தேர்தல் அணியாக மாற்ற தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை' எனக்கூறி, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், முதலில் இயக்கத்திலிருந்து விலகினார்.

கூட்டணியில் பூசல்
இதன்பின், மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம், அரசியல் கூட்டணியாக அறிவிக்கப்பட்டால், யார் முதல்வர் வேட்பாளர், கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதில், ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் பூசல் உருவானது. பேச்சுக்கள் நடத்தியும், ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை.

ஜவாஹிருல்லா அதிருப்தி
இந்நிலையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சியும் விலகியுள்ளது. இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கூறுகையில், மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக மட்டுமே மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்திருந்தோமே தவிர அதை தேர்தலுக்கான அரசியல் கூட்டணியாக மாற்றிக் கொள்ளுவதற்கு துவக்கத்திலேயே நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அணி
மூன்றாவது அணியாக முன்னிறுத்த தொடங்கியதால், அதில் அங்கம் வகிக்க நாங்கள் விரும்பவில்லை. அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே இணைய விரும்புகிறோம் என்றார்.

மமக புறக்கணிப்பு
எங்களது இம்முடிவை ஏற்கெனவே மக்கள் நல கூட்டு இயக்கத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, வரும் 5 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்காது என்றும் கூறியுள்ளார். பாஜக இல்லாத பெரிய கட்சியின் அணியிலேயே இடம்பெற வேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

பெரிய கூட்டணி
தற்போதைய சூழலில் அதிமுக, திமுகவுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.

4 கட்சி கூட்டணி
இதனிடையே திருவாரூரில் நடக்கும், நான்கு கட்சிகளின் கூட்டத்தில், கூட்டணி குறித்த முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, 2வது நாள் பயணமாக நேற்று மாலை திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேசினார். மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 கட்சிகள் கொண்ட கூட்டியக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

திருவாரூரில் அறிவிப்பு
திட்டமிட்டபடி திங்கள்கிழமை திருவாரூரில் அரசியல் கட்சி கூட்டணியாக அறிவிக்கப்படும். இந்த கூட்டணி 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக மட்டும் அமைந்த கூட்டணி அல்ல. மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்க்க ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு என்றும் கூறியுள்ளார் வைகோ.

திருமாவளவன் வருவாரா?
அதேநேரத்தில் திருவாரூரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவாரூர் கூட்டதில் திருமாவளவன் பங்கேற்கும் பட்சத்தில் அவர் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. புறக்கணித்தால், மக்கள் நலக் கூட்டு இயக்கத்திலிருந்து விலகுவது உறுதி என, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications