ஜல்லிக்கட்டுக்கு தடை: வீரத் தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத ரணம்- வைகோ
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற வீரத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆறாதரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வீரத்தின் வெளிப்பாடாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பண்பாட்டு உரிமையை மறுக்கின்ற அநீதி ஆகும்.
தமிழர்கள், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தங்கள் பிள்ளைகளைப் போல, வீடுகளில் போற்றிப் பாதுகாத்து வளர்க்கின்றார்கள். அந்தக் காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறபோது வீர வாலிபர்கள் அதன் கொம்புகளையும், திமிலையும் பற்றிப் பிடித்துத் தங்கள் துணிச்சலையும், வேகத்தையும் நிலைநாட்டுகின்றார்கள்.
இதற்குத் தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்ற காரணம் எவ்விதத்திலும் ஏற்கத் தகுந்தது அல்ல. மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது.

வெளிநாடுகளில் விளையாட்டு
மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் மாடுபிடிப் போட்டியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காளைகளைத் துன்புறுத்திச் சாகடிக்கின்றனர்.

வீரர்களுக்குக் காயம்
ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில், மாடுகள் மீது பாய்கின்ற இளைஞர்கள், ஒரு சிறு தார்க்குச்சியைக் கூடப் பயன்படுத்துவது கிடையாது. உயிரைப் பணயம் வைத்து, வெறுங்கைகளால் மாடுகளைப் பிடிக்கின்ற இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படுகின்றது.

சாலை விபத்துக்கள்
நாள்தோறும் எண்ணற்ற சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் உயிர் இழக்கின்றனர். அதற்காக இனிமேல் சாலைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட முடியுமா?

பாரம்பரிய விளையாட்டு
தமிழர்களின் நெடிய பாரம்பரியப் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான, பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கின்ற ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற வீரத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆறாதரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுசீராய்வு மனு
தமிழர் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட அத்து மீறலாகவே இந்தத் தீர்ப்பு அமைந்து உள்ளது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அறப்போருக்கு ஆதரவு
தென்பாண்டி மண்டலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகத் தமிழர்கள் மேற்கொள்ளும் அறப்போருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications