"பச்சை தலைப்பா கட்டு" வைகோ... தேர்தல் பிரசாரத்தில் திடீர் சபதம்
தூத்துக்குடி: விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் உள்ளன. தனியார் மறுத்தவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அதனால் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை.
எங்கள் கூட்டணி வெற்றிபெற்றால், முதல்அமைச்சர் கூட தனியார் மருத்துவமனைக்கு போகக்கூடாது. அரசு மருத்துவமனைக்கு தான் போக வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நாங்கள் அந்த அளவுக்கு அரசு மருத்துவமனையின் தரத்தை மாற்றிக் காட்டுவோம். நானும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும். மத்திய அரசிடம் பேசி தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் நெருங்க விட மாட்டோம். வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரிகளை அழிக்க விட மாட்டோம்.
ஓட்டப்பிடாரம் என்றாலே வ.உ.சிதம்பரனாரை தான் குறிக்கும். அவருடைய மகன் வாலேசுவரன் தமிழகத்தில், சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்று அவருடைய மகள் மரகத மீனாட்சியிடம் கூறியுள்ளார். ம.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மரகத மீனாட்சி என்னிடம் கூறினார். கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட, மே 16-ந்தேதி தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணிக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications