மரத்தைக் கடத்தும் முதலைகள் தப்பிக்கின்றனர், கூலித் தொழிலாளர்கள் பலியாகின்றனர்... வைகோ வேதனை
சென்னை: ஆந்திர மாநில போலீஸாரின் கொலை வெறித் துப்பாக்கிச் சூட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.

காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும்.
பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications