குண்டுவெடிப்பு சம்பவத்தை மோடி கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தலைநகர் பாட்னாவில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் குண்டுவெடிப்பு சம்பவத்தை மோடி கையாண்ட விதத்துக்கும் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நேற்று அக்டோபர் 27ந் தேதி நண்பகலில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவின் காந்தி மைதானத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியில், அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 90 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

பல இலட்சம் மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி தொடங்குவதற்கு முன்பு, 9.30 மணிக்கு, பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் கழிவறையில் ஒரு குண்டு வெடித்து உள்ளது. அதைச் சோதித்துப் பார்க்க முயன்றபோது வெடித்து இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்தக் குண்டு வெடிப்புக்குப் பின்னரும், காந்தி மைதானத்தில் எந்தவிதமான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, சோதனை நடவடிக்கைகளோ, பீகார் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

அடுத்தடுத்து ஆறு குண்டுகள்..

அடுத்தடுத்து ஆறு குண்டுகள்..

அதன்பின்னர், 11.40, 12.05, 12.10, 12.15,12.25,12.45 ஆகிய நிமிடங்களில் ஆறு குண்டுகள், பேரணி நடைபெற்ற இடத்தில் வெடித்து உள்ளன.

உயிராபத்தை பொருட்படுத்தாத மோடி

உயிராபத்தை பொருட்படுத்தாத மோடி

விமான நிலையத்துக்கு நரேந்திர மோடி வந்தபோது, அவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடைபெறும்; பேரணிக்குச் செல்ல வேண்டாம் என, குஜராத் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். ஆனால், பேரணியை இரத்துச் செய்தால், மக்களிடம் பீதியும், ஆத்திரமும், அதனால் பெரும் கலவரமும் ஏற்படக்கூடும் என்று கருதி, உயிர் ஆபத்தைப் பற்றிப் பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கு ஏற்பது என, நரேந்திர மோடி முடிவு செய்து இருக்கிறார்.

பாஜக தலைவர்களின் பாராட்டுக்குரிய பொறுப்புணர்ச்சி

பாஜக தலைவர்களின் பாராட்டுக்குரிய பொறுப்புணர்ச்சி

பிரமாண்டமான பேரணியில் அவரும், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும், மேடையில் ஏறிப் பேசினார்கள். ஆனால், அவர்கள் எவரும் குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் குறிப்பிட்டோ, யாரையும் குற்றம் சாட்டியோ எதுவுமே பேசாதது, பாராட்டத்தக்க பொறுப்பு உணர்ச்சியைக் காட்டுகிறது.

நெஞ்சு பதறுகிறதே..

நெஞ்சு பதறுகிறதே..

மோடி பேசிய மேடையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் ஒரு குண்டு, முன்னதாக வெடித்து இருக்கிறது. அவர் மேடையை விட்டு இறங்கிச் சென்றதற்குப்பின்னர், 80 அடி தொலைவில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வைப்பதற்கான குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நெஞ்சைப் பதற வைக்கின்ற இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததற்குப் பின்னரும், பாட்னா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை; உயிர்க்காற்றுக் கருவிகள் (ஆக்சிஜன் வென்டிலேட்டர்), இரத்தம் ஏற்றுவதற்கான கருவிகள் உள்ளிட்ட உயிர்காப்புக் கருவிகள் இல்லை; உடனடியாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று, பாரதீய ஜனதா கட்சியின் ராஜீவ் பிரதாப் ரூடி மருத்துவமனையில் இருந்தவாறே கூறி இருப்பது, குண்டு வெடிப்பை விடக் கொடூரமான அதிர்ச்சியைத் தருகிறது.

முன்கூட்டியே எச்சரிக்கை

முன்கூட்டியே எச்சரிக்கை

பாட்னா பேரணியில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று, தனது அரசுக்கு முன்கூட்டி மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எதுவும் தெரிவிக்கவில்லை என்று, பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் கூறி உள்ளார். ஆனால், அக்டோபர் 23 ஆம் தேதியன்றே, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துiறைப் பிரிவு, நரேந்திர மோடி பேரணியில் தாக்குதல் நடக்கலாம்; அவரது உயிருக்குக் குறி வைக்கப்படலாம் என்றும், பீகார் மாநில அரசின் காவல்துறைத் தலைமைக்குக் கடிதம் மூலமாகவே எச்சரிக்கை தந்து உள்ளது.

கொடிய உள்நோக்கம்

கொடிய உள்நோக்கம்

இதற்குப்பிறகும், எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பீகார் மாநில காவல்துறையால் மேற்கொள்ளப்படவில்லை. பேரணியில் கலவரம் ஏற்படட்டும்; நரேந்திர மோடி பேசாமல் போகட்டும்; அல்லது, உயிர்ப்பலி ஆனாலும் பரவாயில்லை என்ற கொடிய நோக்கத்தைத் தவிர, வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது. நினைப்பதற்கே இதயம் நடுங்குகிறது.

நரேந்திர மோடிக்கு புகழாரம்

நரேந்திர மோடிக்கு புகழாரம்

நேற்றைய பேரணியில் நரேந்திர மோடி, இப்பிரச்சினையைக் கையாண்ட விதமும், கடல் போலத் திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அச்சமும் ஆத்திரமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று, குண்டுவெடிப்பைப் பற்றிக் குறிப்பிடாமல், பேரணியை நடத்திய முறையும், மிகவும் பாராட்டுக்கு உரியதாகும். இல்லையேல், வட இந்தியா நாம் கற்பனை செய்ய முடியாத மிகப்பெரிய இரத்தக்களறியைச் சந்தித்து இருக்கும்; காட்டுத் தீயெனக் கலவரம் நாலாத்திசைகளிலும் பரவி இருக்கும்; பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

மகாத்மா காந்தி பெயரில் அமைந்து உள்ள மைதானத்தில், லோகநாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயண் முழங்கிய இடத்தில், இந்தக் கொடிய சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

மோடி உயிருக்கு உலை வைக்கவே..

மோடி உயிருக்கு உலை வைக்கவே..

தற்போது கைது செய்யப்பட்டு இருப்பவர்கள், விசாரணையில் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் நரேந்திர மோடியின் உயிருக்கு உலை வைக்கும் நோக்கம் இருந்தது என்பது தெரியவந்து உள்ளது.

சமூக ஒற்றுமைக்கு உலை

சமூக ஒற்றுமைக்கு உலை

நாட்டின் சமூக ஒற்றுமைக்கே உலை வைத்து, பேரழிவுகளை நடத்தத் திட்டமிட்டு, இக்கொலைபாதகச் செயலில் ஈடுபட்ட கொடியவர்கள், அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் அனைவர் மீதும், சட்டப்படி, மிகக்கடுமையான நடவடிக்கைகளை விரைவாக, மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?

இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?

பலத்த அதிர்ச்சியைத் தந்த இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபின்னரும், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டது கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆத்திர உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்

ஆத்திர உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்

எனவே, இந்த வேளையில் அனைத்துத் தரப்பினரும், வெறுப்புக்கோ ஆத்திர உணர்வுகளுக்கோ இடம் கொடுத்து விடாமல், மனித நேயத்தோடு, ஒற்றுமை காக்க வேண்டுகிறேன்,

இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+