கருணாநிதி குறித்த பேச்சு... ஆவேசமான திமுகவினர்... 500 இடங்களில் வைகோ கொடும்பாவி எரிப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 500 இடங்களில் திமுகவினர் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அந்தவகையில், நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய வைகோ, திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவின் இந்தப் பேச்சுக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களான திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸின் மாநில தலைவர் இளங்கோவனும், வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, "வைகோ கடந்த ஒரு வாரமாக நிதானம் இழந்து பேசி வருகிறார்" என்றும் விமர்சித்திருந்தார்.
வைகோவின் இந்தப் பேச்சால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று மாலையில் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லை உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வைகோவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வைகோவிற்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது பேச்சுக்கு கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி வைகோவும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications