மது இல்லாத மாநிலம் உருவாக எங்களுக்கு வாக்களியுங்கள் : வைகோ
சங்கரன்கோவில்: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகிட வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார்.
தென்காசி லோக்சபா தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது:

தமிழகர்களுக்கு துரோகம்
இந்தியாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் துரோகம் செய்து வருகிறது. தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழின விரோதத்துடன் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிமுக, திமுகவை புறக்கணியுங்கள்
இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு துணைபோகும் மத்திய காங்கிரஸ் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த திமுக ஆகிய இரு கட்சிகளையும் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

மது இல்லாத மாநிலம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என பட்டி தொட்டிகள் எல்லாம் நடந்தேன். அப்போது தாய்மார்கள் மது எனும் அரக்கனை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். மதுவால் தமிழகம் கெட்டு விட்டது. மது இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகிட வேண்டும்.

பம்பரம் சின்னத்தில் வாக்கு
தென்காசி லோக்சபா தொகுதியில் ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் எளிமையானவர், ஜாதி மதம் பாராமல் அனைவரையும் அன்போடு அணைத்து செல்வார், அவருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications