லோக்சபா தேர்தல்: விருதுநகரில் களமிறங்கும் வைகோ… தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு
விருதுநகர்: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில்,போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது. இம்முறை, நிச்சயம் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்க உள்ள வைகோ, அதற்காக, சட்டசபை தொகுதி வாரியாக, தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் 2014ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், வைகோ விருதுநகரில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. எப்படியும் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்பில் அவர் உள்ளார்.

மதிமுக மாநாடு
இதன்காரணமாகவே செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, விருதுநகரில், ம.தி.மு.க.,மாநில மாநாட்டை நடத்தினார். அப்போதே ஓரளவிற்கு வைகோ போட்டியிடப்போவது உறுதியாகிவிட்டது.

மறுமலர்ச்சி பயணம்
தொடர்ந்து, மூன்றாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தை தனது சொந்த தொகுதி கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதோடு மட்டுமல்லாது வி.ஐ.பி.,க்கள் மற்றும் சமுதாய தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து, தனக்கு ஆதரவு தர கேட்டுக்கொண்டார்.

தேர்தல் பணிக்குழு
இந்நிலையில், விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணிக்குழுவினை வைகோ அமைத்துள்ளார்.

பூத் கமிட்டி அமைப்பு
மாவட்ட செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் அதில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், கிராமங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை துவங்கி உள்ளனர். கடந்த தேர்தலில் வைகோ தோற்க முக்கிய காரணம் , சட்டசபை தொகுதியாக அவர் பெற்ற ஓட்டுகள் விபரம் போன்றவற்றை வைத்து, பணிகளைத் துவங்கியுள்ளனர்.

விருதுநகரின் பிரச்சினைகள்
லோக்சபா தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகள் ,அதற்கு தற்போதைய எம்.பி.,மாணிக்கம் தாகூர் என்ன செய்தார் போன்றவற்றை ஆராய்ந்து வருகின்றனர். வைகோவை வெற்றிபெறச்செய்தால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுமென பொதுமக்களை சந்தித்து, வலியுறுத்தி வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications