மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார்
சென்னை: மதிமுக கட்சியின் சார்பாக "மதிமுகம்" என்ற புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று, இம்மாதம் தனது ஒளிபரப்பு சேவையை தொடங்கவுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு ஒளிபரப்பிற்கான வேலைகள் நடந்துவந்தன. இந்நிலையில் ஒளிபரப்பிற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் ஜூலை 14ம் தேதி ஒளிபரப்பு தொடங்கும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்செங்கோட்டில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ, தமிழ்நாட்டில் ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டுள்ளது. பணநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடந்த போட்டியில் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளனர். ஊடகங்களும் பலியானது. இது தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு. ஊடகங்களும், பத்திரிக்கைளும் ஒத்துழைத்திருந்தால் நாம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்றார்.
தாயகம் தங்கதுரையும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ‘மதிமுகம்' என்று ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். நமது மதிமுகம் தொலைக்காட்சி ஜூலை 14ல் ஒளிபரப்பை தொடங்குகிறது. காலம் இப்படியே இருக்காது. மாற்றங்களைத் தரும் என பேசினார்.
அரசியல் கட்சியினர் தங்களின் கொள்கைகளை தொண்டர்களிடம் கொண்டு சேர்க்க நாளிதழ்களை முன்பு தொடங்கினர். அண்ணா, நமது எம்.ஜிஆர், முரசொலி, சங்கொலி ஆகிய அரசியல் நாளிதழ்கள் கட்சிகளின் கொள்களை தொண்டர்களிடம் கொண்டு சேர்த்தன.
காலத்திற்கேற்ப அனைத்து அரசியல் கட்சியினரும் இன்றைக்கு தொலைக்காட்சி சேனல்களை தொடங்கியுள்ளனர். அதிமுகவின் ஜெயாடிவி, திமுகவின் கலைஞர் டிவி, தேமுதிகவின் கேப்டன் டிவி, பாமகவின் மக்கள் டிவி, இந்திய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைமுறை டிவி, விசிகவின் வெளிச்சம் டிவி, நாம் தமிழர் கட்சியின் தமிழன் டிவி என பல டிவி சேனல்களை அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
20 ஆண்டுகாலமாக உள்ள மதிமுகவிற்கு என்று தனிப்பட்ட டிவி சேனல்கள் கிடையாது. தனது பேச்சுக்கள் பிரச்சாரங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பது வைகோவின் மனக்குறையாக இருந்தது. அது தவிர கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் சில சேனல்களில் பேட்டி என்ற பெயரில் கேள்விகள் கேட்டு வைகோவை மன வேதனைக்கு ஆளாக்கி விட்டனர்.
மதிமுகவிற்கு என்று தனி டிவி சேனல் தொடங்க வேண்டும் என்ற வைகோவின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. மதிமுகம் என்ற டிவி சேனல் மதிமுக சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. மதிமுக உடன் ம் என்ற எழுத்தை மட்டும் இணைத்து மதிமுகம் ஆக்கிவிட்டனர்.
இது செய்திகளை மட்டும் வழங்காமல் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கும் என்று வைகோ கூறியுள்ளார். அரசியல் விவாதங்கள், சினிமா, செய்திகள் ஆகியவை மதிமுகம் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என்று கூறிய வைகோ, இது கட்சி சேனல் அல்ல என்றும் கூறியுள்ளார்.
இனி மதிமுகவின் அறிக்கைகள், கூட்டங்கள், கொள்கைகள் போன்றவை முழுமையாக காணமுடியும் என்றும் இந்த டிவி சேனலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கையில்தான் உள்ளது என்றும் வைகோ கூறியுள்ளார்.