முல்லைப் பெரியாறு போராட்டம் கைகொடுக்கும் நம்பிக்கை.. தேனிக்கு மாறுகிறார் வைகோ?
தேனி: லோக்சபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இம்முறை தேனி தொகுதியில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. வைகோ போட்டியிடுவதாக கூறப்படும் விருதுநகர் தொகுதியில் "அகிலன்" சினிமா தயாரிப்பாளர் டாக்டர் சரவணனை வேட்பாளராக மதிமுக நிறுத்தக் கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்றுள்ளது மதிமுக. விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 8 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் தொகுதியை கைவிட்டு தேனி தொகுதியில் வைகோ போட்டியிடக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை மதிமுக நடத்தியது. முல்லைப் பெரியாறு அணைக்காக தொடர்ந்தும் வைகோ தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை அடிப்படையாகக் கொண்டு தேனி தொகுதியில் முக்கிய விவசாய சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் மதிமுக நிர்வாகிகள் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளனர். அதில் வைகோ, தேனி தொகுதியில் நின்றால் முழு ஆதரவு கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேனி தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விருதுநகரில் டாக்டர் சரவணன்?
அத்துடன் விருதுநகர் லோக்சபா தொகுதியில் "அகிலன்" திரைப்படத்தை தயாரித்து நடித்த டாக்டர் சரவணன், மதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பார்த்திபனும் திமுக வேட்பாளராக பொன். முத்துராமலிங்கமும் போட்டியிடுகின்றனர். வைகோவுடன் திமுகவை விட்டு வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தவர் பொன். முத்துராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications