சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் ஜி.கே. வாசனுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு
சென்னை: தேர்தல் கூட்டணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை எழும்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. அப்போது தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த பிறகு வாசனும் தங்கள் அணியில் சேரவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டணியில் சேருவதற்கு ஜி.கே.வாசன் ஆர்வமாக இருந்ததாகவும், அதிமுகவில் ஒற்றை இலக்க தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவதற்கு அக்கட்சியின் தலைமை முடிவு செய்திருப்பதால் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசன், வைகோ மற்றும் தொல்.திருமாவளவனுடன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அவர், தேமுதிக தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு தயார் ஆகிவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications