வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கூடாது: வைகோ
மதுரை: ''தமிழர்களின் பண்பாட்டோடு, வாழ்வோடு, உணர்வோடு, வீரத்தோடு கலந்தது ஜல்லிக்கட்டு. அதற்கு தடை விதிக்கக்கூடாது,'' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வருகிறது. இந்த நாளில் ஜல்லிக்கட்டு, ஆட்டு சண்டை, சேவல் சண்டை போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தென் தமிழகத்தில் நடைபெறுவது வழக்கம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் சேவல்சண்டைக்கு தயராகும் சேவல்களையும், ஆட்டுச் சண்டைக்கு தயாராகும் ஆடுகளையும், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் ஜல்லிக்கடு மாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு, எருது, மஞ்சு விரட்டு போன்றவை தமிழர்களின் பண்பாட்டோடு கலந்தவை. தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் வீர விளையாட்டுக்கள்.
இது ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக உள்ளது. அங்கு சிலர் எருதுகளை ஈட்டியால் குத்தி கொன்று விடுகின்றனர். அது போன்ற கொடூரம் இங்கில்லை. இங்கு தார் குச்சியை வைத்து கூட காளைகளை குத்துவது கிடையாது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஆரோக்கியமாகவே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனுமதி பெற வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்து நல்ல பதில் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.