2004ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்.... 2016ல் விநாயகா ரமேஷ் : வைகோவின் கடைசிநேர தடாலடி
சென்னை: 2004ம் ஆண்டு சிவகாசி லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை போட்டியிடச் செய்து வெற்றி பெற வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மீண்டும் அதேபோல ஒரு முடிவை 2016 சட்டசபைத் தேர்தலில் எடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த வைகோ திடீரென்று மனம் மாறியதால் மதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்ணாநகரில் வேட்பாளர்கள் பெயரை அறிவித்த போது கடைசியாக கூறினார். அப்போது தொண்டர்கள் அடைந்த உற்சாகத்தை எளிதாக சொல்லிவிட முடியாது. உடனே பொன்னாடைகளைப் போர்த்தி அப்போதே வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோவில்பட்டியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வது போலவே ஊர்வலமாக வந்து, மனு தாக்கல் செய்யும் அறைக்குள் சென்ற உடன் திடீரென தனக்கு பின்னால் இருந்த விநாயகா ரமேஷை முன்னிறுத்தி பணம் கட்டினார். இதை பார்த்த செய்தியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியே ஏற்பட்டது.
அரசியல் போராளியாக அறியப்பட்டாலும் தேர்தலுக்கும் வைகோவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். போட்டியிட்ட பல தேர்தல்களில் அவர் தோல்வியையே பரிசாக பெற்றுள்ளார். இம்முறை கோவில்பட்டி அந்த மோசமான சரித்திரத்தை மாற்றி எழுதுமா என்பதே தொண்டர்கள் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்தே பின் வாங்கியுள்ளார்.
வைகோவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று யாரும் எதிர்பாராத ஒரு முடிவினை 2004ம் ஆண்டே எடுத்துள்ளார் வைகோ.
2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்பவருக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்தார். அப்போதும் மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
35 வயதே ஆன ரவிச்சச்திரன் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.குடும்பமே தீவிரமான திமுக விசுவாசிகள். மதிமுக உருவானபோது வைகோவுக்காக திமுகவை விட்டுவிலகினார் ரவிச்சந்திரன். கட்சியின் விவசாய அணித் துணைச் செயலாளராக இருந்த ரவிச்சந்திரனை சிவகாசி லோக்சபா லோக்சபா தொகுதி வேட்பாளாராக அறிவித்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இன்று கோவில்பட்டி தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக விநாயக் ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். வெளியே வந்து பிரச்சார வாகனத்திற்கு பேசிய வைகோ, தனக்கு எதிராக திமுகவினர் ஜாதி மோதலை கட்டவிழ்த்து விட நினைப்பதாகவும், இதனை தவிர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல் விலகி விட்டதாகவும் கூறினார்.
கோவில்பட்டி தொகுதியில் தேவர், நாடார் சமூகத்தினரைத் தவிர்த்து நாயக்கர் உள்ளிட்ட பல ஜாதி பிரிவினரும் கணிசமாக வசிக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களின் கோட்டையான கோவில்பட்டியில் வைகோ வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து ஏழு முறை கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
கோவில்பட்டியை விட்டுக்கொடுக்க கம்யூனிஸ்ட்கள் முதலில் விரும்பவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவுக்கு பாதுகாப்பான தொகுதி வேண்டும் என்பதால் கோவில்பட்டியை கம்யூனிஸ்ட்கள் விட்டுக்கொடுத்தனர்.
கடைசி நேரத்தில் போட்டியிடாமல் விலகியுள்ள வைகோ, முழு வீச்சில் பிரச்சாரம் செய்யப்போவதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.
மதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான விநாயகா ரமேஷ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். 48 வயதான விநாயகா ரமேஷ் தொழிலதிபர். கோவில்பட்டி பகுதியில் பெரும் செல்வந்தராம்.
வைகோவிற்காக தொகுதியை விட்டுக்கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியினர், விநாயகா ரமேசை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications