தேமுதிக சின்னத்தை முடக்க திமுக சதி திட்டம்.. நெருப்போடு விளையாடாதீர்கள்: வைகோ ஆவேசம்
சென்னை: மக்கள் நல கூட்டணி, தேமுதிக கூட்டணியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்ட பிறகு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வைகோ பேசியதாவது:
விவசாயிகளின் அத்தனை கடன்களையும் தள்ளுபடி செய்யப்போகிற ஆட்சி, டாஸ்மாக்கை மூடப்போகும் ஆட்சி, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர போகிறது. அதுதான் மக்கள் நல கூட்டணி ஆட்சி.
நாளைய தினம், மாமண்டூரில் நடைபெற உள்ள மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். எதிர்க் கூடாரம் கலங்கப்போகிறது. நாளைய மாநாட்டில் அப்பழுக்கற்ற பெயருக்கு சொந்தக்காரரான, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க உள்ளது.
கோடிகளை கொடுத்து, பண வலையால் தேமுகவை உடைக்க திமுக தலைமை சதியில் ஈடுபட்டது. தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு ரூ.3 கோடி தர பேரம் பேசியது நிரூபிக்கப்பட்டது.
தேமுதிக கொடியை முடக்க, தேமுதிக சின்னத்தை முடக்க முடியுமா என்றெல்லாம், அறிவாலயத்தில் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நெருப்புடன் விளையாட வேண்டாம். துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது.
தெருத்தெருவாக எனது கொடும்பாவியை கொளுத்தினார்கள், செருப்பால் அடித்தார்கள், நான் மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டுள்ளேன். மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஆத்திரம் மூட்ட திமுக முயல்கிறது. திமுக பொருளாளரும் ஆத்திரப்படுத்த முயலுகிறார். ஆனால், மதிமுக மாவட்ட செயலாளர்களிடம் நான் கூறியதெல்லாம், கோபப்படாதீர்கள் என்பதுதான்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது வராத ஆத்திரம், இசைப்பிரியா கொலையானபோது வராத ஆத்திரம், நான் மன்னிப்பு கேட்டபிறகும் கலைஞருக்கு வருகிறது. என்னை உயிரோடு கொளுத்த வந்தாலும் பொறுத்துக்கொள்வேன். எனது கண்மணிகளுக்கு தீங்கு ஏற்பட்டால் பொறுத்து கொள்ளமாட்டேன். அவர்கள் (திமுக கூட்டணி) தோற்க போகிறார்கள். எனவே கலவரம் செய்ய முயலுகிறார்கள்.
நாளைய மாமண்டூர் மாநாட்டை உலக தமிழர்கள் கவனிப்பார்கள். எனவே கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.